தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்: தென்மாவட்ட வியாபாரிகள் குவிந்தனர்
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஒட்டி மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. தென்மாவட்டங்களில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுசந்தைகள் புகழ் பெற்றவையாகும். இச்சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் கூட வியாபாரிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை வாரம்ேதாறும் செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது. இச்சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடப்பது வழக்கம்.
தீபதிருநாளாம் தீபாவளி பண்டிகை வரும் 20ம்தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்ேவறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளோடு சந்தையில் குவிந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கறி விற்பனை அதிகம் இருக்கும் என்பதால், நல்ல வாட்டசாட்டமான ஆடுகள் ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஒரு செம்பு கிடா ரூ.35 ஆயிரத்திற்கும், சண்ட கிடா ரூ.32 ஆயிரத்திற்கும் ஏலத்தில் விலை போனது.
சுமார் 2000 ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை விற்பனை இன்று பிற்பகலுக்குள் ரூ.3 ேகாடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இதேபோல் இன்று சந்தை கூடியது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொது மக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. எடைக்கு ஏற்றார் போல் ஒரு ஆடு ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமையும் (19ம் தேதி) பென்னாகரம் வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தையில் இன்று வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. இன்று நடந்த சந்தைக்கு, வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டுவரப்பட்டன. தீபாவளி நெருங்குவதால், கேரள வியாபாரிகள் ஏராளமானோர் வந்தனர். இதனால், மாடுகள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. ஒரே நாளில் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக சந்தை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.