தீபாவளி பண்டிகை: டெல்லியில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசு அதிகரித்துள்ளது. 2020 முதல் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.புது டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு பொதுமக்களிடம் உச்சநீதிமன்றமும், டெல்லி அரசும் தொடா்ந்து கோரி வந்தன.
தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இரவு 2.30 வரை அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. இச்சூழலில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. குறிப்பாக வசீர்ப்பூர், பவானா, ஜஹாங்கீர் பகுதிகளில் நிலைமை மோசமானது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று டெல்லியில் காற்று தரக்குறியீடு 359 ஆக பதிவானது. ஆனால் இந்த ஆண்டு 450 கடந்தது. இது தேசிய சராசரியைவிட 1.8 மடங்கு அதிகமாகும்.