தீபாவளி கொண்டாட்டம் 3 நாளில் ரூ.790 கோடிக்கு மதுவிற்பனை: கடந்தாண்டை விட ரூ.351 கோடி அதிகம்
சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்.20) கொண்டாடப்பட்டது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்கள் கிடைக்கப்பெற வேண்டி, சாதாரண ரக மது வகைகள் முதல் உயர் ரக மதுவகைகள் வரை விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்தாண்டுக்கான தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாளில் மட்டும் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) ரூ.790 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ரூ.789.85 கோடிக்கு தமிழகம் முழுவதும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் கடந்த சனிக்கிழமையை பொறுத்தவரை ரூ.230.06 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.293.73 கோடியும் மற்றும் தீபாவளி தினத்தன்று ரூ.266.06 கோடியும் விற்பனையாகி உள்ளன. இதில் சென்னை மண்டலம் ரூ.185.25 கோடி, திருச்சி மண்டலம் ரூ.157.31 கோடி, சேலம் மண்டலம் ரூ.153.34 கோடி, மதுரை மண்டலம் ரூ.170.64 கோடி மற்றும் கோவை மண்டலம் ரூ.150.31 கோடி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.351 கோடி கூடுதல் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.