திமுகவை வீழ்த்துவது கடினம்: டிடிவி. தினகரன் உறுதி
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் சுயபரிசோதனை செய்துகொண்டு, வரும் சட்ட பேரவைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் திமுக, கூட்டணி பலத்தில் இருப்பதால் எதிர்ப்பவர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் கடும் பலத்துடன் உள்ளனர்.
அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள் சரியாக திட்டமிட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வை வீழ்த்துவது கடினம். தே.ஜ. கூட்டணியில் சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. எம்ஜிஆர். ஆரம்பித்த அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. பாஜவுக்கும் எங்களுக்கும் எவ்வித கசப்பும் இல்லை என்றார். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக மாநகா் மாவட்ட செயலாளர் விசாலாட்சி அறிவிக்கப்பட்டார்.