கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணை
சென்னை : கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி மகேந்திர சிங் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக டிவி விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக தோனி வழக்கு தொடர்ந்தார்.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சி உள்ளிட்டோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கில் சாட்சி விசாரணையை துவங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரபலமானவர் என்பதால், மாஸ்டர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால், குழப்பங்கள் ஏற்படும் என்பதால், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். அக்டோபர் 20 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி இடையில், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால், அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.