அக்டோபர் முதல் வாரத்தில் தர்மபுரியில் இருந்து துவக்கம் மகனுக்கு போட்டியாக தந்தை டூர் கிராமம் கிராமமாக செல்லும் ராமதாஸ்: வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு
திண்டிவனம்: அன்புமணியின் நடை பயணத்துக்கு போட்டியாக கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணத்தை அக்டோபர் முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ராமதாஸ் துவக்க உள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த கட்ட செயல்பாடுகள், தேர்தல் பணி, கூட்டணி நிலைப்பாடு சம்பந்தமாக தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் நான் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கட்சி துவக்கும்போது எப்படி ஒவ்வொரு கிராமமாக சென்று கொடியேற்றி கட்சியை வளர்த்தேனோ, அதேபோல் இப்போதும் மக்களிடம் செல்ல உள்ளேன்.
எனவே அதற்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்கத்தினர் சிறப்பாக செய்ய வேண்டும். வரும் தேர்தலிலும் பாமக கூட்டணி அமைத்துதான் போட்டியிடும். எனவே, எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்’ என்றார். கிராம்தோறும் சுற்றுப்பயணத்தை அக்டோபர் முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து துவங்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளார். இதற்காக ஏற்பாடுகளை வன்னியர் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
வன்னியர் சங்க கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில், ‘வன்னியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். இதற்காக 7 பேர் கொண்ட போராட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளோம்.
கவுரவ தலைவர் ஜிகே மணி, பு.தா.அருள்மொழி, முன்னாள் எம்எல்ஏக்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ஆறுமுகம் முன்னாள் எம்பி துரை, கரூர் பாஸ்கர், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஆகிய 7 பேர் கூடி போராட்டம் குறித்து முடிவு செய்வார்கள்’ என்றார்.
* பாமக எங்களுடையதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இருக்கு...
தேர்தல் ஆணையத்தை நமது சார்பில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி அணுகி இருப்பதாக சொல்லப்படுகிறதே? என்ற கேள்விக்கு, ஆமாம், ‘‘அதாவது பொய் பொய்யா பொய் வைத்து பேசினவங்களின் வேசம் கலைந்து விட்டது, கலையப்போகுது. பொய் சொன்னவங்க, அய்யோ பொய் சொல்லி விட்டோமே என ஏங்கப் போகிறார்கள். அந்தளவுக்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையாக 56 வருஷமாக ஓய்வின்றி உழைத்து வருபவன் நான். ஆனால் இன்றைக்கு ஒரு கும்பல் பாமக என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வேஷம் நிச்சயமாக கலைந்துவிடும், கலைக்கப்படும். நீங்களும் பார்த்தீர்கள். நேற்றும் பார்த்தீர்கள், இன்றைக்கும் பார்த்தீர்கள். மாநில செயற்குழுவுக்கு 800 கார்கள். பொதுக்குழுவில் 8 ஆயிரம் பேர். மகளிர் மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.
இப்படி பாமக, வன்னியர் சங்கம் அப்படின்னு சொன்னால் அது நாங்கள்தான் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. நாங்கள் தான் என்று சொல்லும்போது இன்னொருத்தரு நீங்கள் கேட்பீர்கள் அது யாருன்னு, அது ஒரு கும்பல்தான். அந்த கும்பலின் வேஷத்தை கலைச்சுட்டோம். எப்போ நாங்கள் கட்சியை விட்டு நீக்கினோமோ அப்போதே கலைந்துபோச்சு’’ என ராமதாஸ் தெரிவித்தார்.
* தென்கொரியா, ஜப்பானில் கூட அன்புமணி போட்டியிடுவார்: ராமதாஸ் நக்கல்
சின்னம் அவர்களுக்குதான் என்று ஒரு லட்டரை பாலு வெளியிட்டு இருக்கிறார்களே? என கேட்டதற்கு, போலி, எல்லாம் போலி, போலி நபர்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார். பீகாரில் பாமக போட்டியிடப் போவதாகவும், மாம்பழம் சின்னம் ஒதுக்கி இருப்பதாகவும் கூறுகிறார்களா? என்ற கேள்விக்கு, ‘இங்கெல்லாம் போட்டியிடப் போவதாக சொல்கிறார்கள். அதாவது, தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் தீவு போன்ற நாடுகளிலும்கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்’ என்று நக்கலாக ராமதாஸ் பதிலளித்தார்.