தர்மபுரி அருகே கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்: எஸ்பி அதிரடி நடவடிக்கை
தர்மபுரி: தர்மபுரி அருகே, கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய எஸ்எஸ்ஐயை தர்மபுரி எஸ்பி மாதேஸ்வரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில் உள்ள கிணற்றில் ஒட்டப்பட்டி காமராஜர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி கோமதி (28) என்பவர் தத்தளித்து கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரித்து வெண்ணாம்பட்டியில் உள்ள மகள் வேதாஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரின் தொல்லை காரணமாக தர்மபுரி டவுன் போலீசில் கோமதி புகார் செய்தார். அப்போது, அங்கிருந்த எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த ராஜாராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகினர்.
இது ராஜாராமின் மனைவிக்கு தெரிந்ததால் பிரச்னை ஏற்பட்டது. அதனால், ஒட்டப்பட்டி காமராஜ் நகரில், கோமதிக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்தார் ராஜாராம். அங்கு தம்பதி போன்று வாழ்ந்தனர். கடந்த 3 மாதங்களாக தொடர்பை ராஜாராம் நிறுத்தியதால் கோமதி கேட்டுள்ளார். இந்நிலையில், இந்த பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்தால் சரியாக விடும் என்று கூறிய ராஜாராம், நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோயிலுக்கு வந்துவிடுமாறு கோமதியிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கோமதி ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ராஜாராமும் காரில் வந்துள்ளார்.
பின்னர், ராஜாராம், காரில் இருந்த பிளாஸ்டிக் வாளியை எடுத்து வந்து, கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு கோயிலுக்கு போகலாம் என்று கூறியுள்ளார். அங்கு சென்றதும், தனக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்திருப்பதால், வாளியை தூக்க முடியாது. நீயே தண்ணீர் எடு என்று கூறியுள்ளார். அதன்படி அவரும் தண்ணீர் எடுத்தபோது,கிணற்றில் தள்ளி விட்டு தப்பி விட்டார். அதிர்ஷ்டவசமாக கோமதி, கல்லை பிடித்து கொண்டு இரவு முழுவதும் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை. நேற்று காலையில் பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து தற்போது பாப்பாரப்பட்டி ஸ்டேஷனில், தனிப்பிரிவு போலீஸ் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வரும் ராஜாராமை கைது செய்தார். பின்னர் அவரை தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜாராமை தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.