டிஜிபி நியமனத்தை எதிர்த்து முறையீடு மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் நடராஜ், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது, ‘தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம். இது சம்பந்தமாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்’ என்று கோரினார். இதை கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனர்.