எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்: புதிய வரைவு விதிகளை முன்மொழிந்தது DGCA
எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் என புதிய வரைவு விதிகளை DGCA முன்மொழிந்துள்ளது. அவற்றின் முக்கிய அம்சங்களாவன,
விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு பணத்தைத் திரும்ப அளிக்கும் முழுப் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும்.டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 21 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 7 நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்.48 மணிநேரத்திற்குள் பயணிகள் புதிய பயண தேதிக்கான விமானக் கட்டணம் மாறுபட்டால், அதற்கான கட்டண வேறுபாட்டை மட்டுமே பயணி செலுத்த வேண்டும்.மற்றபடி இந்த பயண மாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
உள்நாட்டு விமான பயணமாக இருந்தால் முன்பதிவு செய்த தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் , சர்வதேச விமான பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது என தெரிவித்துள்ளது.
பெயர் திருத்தம்
விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம்.முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகள் போன்ற சிறு பிழைகளைச் சுட்டிக்காட்டினால், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் அதை விமான நிறுவனங்கள் திருத்தி வழங்க வேண்டும்.மருத்துவ அவசரம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய நேரிட்டால், விமான நிறுவனங்கள் பணத்தைத் திரும்ப அளிக்கலாம். அல்லது ரத்து செய்யப்பட்ட தொகையை எதிர்காலப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில் Credit Shell-லை வழங்கலாம்.
DGCA வெளியிட்டுள்ள இந்த வரைவு விதிகள் குறித்து, பங்குதாரர்கள் நவம்பர் 30 வரை தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.இந்த மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டால், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பயணிகள் உரிமைகளையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். என தெரிவித்துள்ளது.