கார்த்திகை பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்
வத்திராயிருப்பு: கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வழக்கமான நாட்களை விட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். நேற்று கார்த்திகை மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று அதிகாலை தாணிப்பாறைக்கு அடிவாரத்துக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பாலித்தீன் பைகள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். ஆனால் பிரதோஷத்திற்கு பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.