மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் திருப்திகரமாக உள்ளது
*ஆ.ராசா எம்பி., பாராட்டு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் திருப்திகரமாக உள்ளதாக ஊட்டியில் நடந்த வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் நீலகிரி எம்பி., பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நீலகிரி எம்பி,ஆ. ராசா தலைமையில் நடந்தது. அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், நீலகிரி எம்பி., தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பிரதான் மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுகாதார கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களிடம் ஆ.ராசா எம்பி, கேட்டறிந்தார்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில், நடைபெற வேண்டிய மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், கடந்த நிதியாண்டுகளில் தமிழக அரசாலும், ஒன்றிய அரசாலும் வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
சில பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையும் விரைந்து முடிக்க உரிய அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் திருப்திகரமாக உள்ளது. அதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.
பொது விநியோக திட்டத்தின் காலாண்டு கூட்டத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு, மின்னணு குடும்ப அட்டைகள் வாரியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் விவரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளின் கொள்ளளவு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஊட்டி எம்எல்ஏ கணேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கெளர், மாவட்ட வன அலுவலர்கள் வெங்கடேஷ் பிரபு, கௌதம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யாதர், கணேசன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, நகர்மன்ற தலைவர்கள் வாணீஸ்வரி, சுசீலா, ஜெயக்குமாரி, பரிமளா, சிவகாமி, நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.