யார் யாரோ கிளம்பி அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என கனவு காண்கிறார்கள் எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, திமுக அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணை தலைவர் இரா.ஏ.பாபு இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நேற்று நடத்தி வைத்தார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய போராட்டம், நெருக்கடி நிலைக் காலம். அந்த நெருக்கடி நிலைக் காலத்தில், திமுக சந்தித்த தியாகங்கள்; தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, அந்த தியாகங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர்கள் பட்டிருக்கும் கஷ்டங்கள் நஷ்டங்கள் இதெல்லாம் வரலாற்றில் தெளிவாகப் பதிந்திருக்கக் கூடியவை. அப்படி வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய வகையில், எதற்கும் அஞ்சாமல்-எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கக்கூடியவர்களாகத்தான் திமுகவை சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக நம்முடைய திமுக பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்கு அடையாளமாக விளங்கியவர்தான், நம்முடைய செங்குன்றம் ஏழுமலை. ஓராண்டு காலம் மிசா என்ற கொடுமையான சட்டத்தில் திமுகவை சார்ந்திருக்கும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், நம்முடைய மிசா ஏழுமலை கைது செய்யப்பட்டு எங்களோடு சென்னைச் சிறைச்சாலையில் இருந்தவர். அவர் ஏன் மிசா சட்டத்தில் கைதாகி உள்ளே வந்தார் என்று கேட்டால், மிசா என்ற அந்தக் கொடுமையான சட்டம் தமிழ்நாட்டில் பாய்ச்சப்பட்டு, நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திமுகவில் இருக்கும் முன்னோடிகள் எல்லாம் கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், சிறையில் இருப்பவர்கள் யார் யார் என்பதைப் பற்றி கூட, பத்திரிகைகளில் எழுத முடியாத - தொலைக்காட்சிகளில் சொல்ல முடியாத - வெளியில் செய்தியை வெளியிட முடியாத வகையில், அன்றைக்குக் கடுமையான சட்டங்கள் எல்லாம் இருந்தன.
அதுமட்டுமல்ல, கட்சியில் இருக்கும் தலைவர்கள் யாரும் பொதுக் கூட்டத்தில் பேசக்கூடாது; வெளியில் சென்று பேசக்கூடாது; திருமணத்திற்குச் சென்றால்கூட அரசியல் பேசக்கூடாது என்ற நிலை எல்லாம் இருந்த நேரம். தலைவர் கலைஞருக்கு பேசுவதற்குக் கூட இடம் கொடுக்கக் கூடாது என்று அன்றைக்குப் பல கொடுமைகள் எல்லாம் சட்டமாக இயற்றி வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் நம்முடைய செங்குன்றம் பகுதியைச் சார்ந்த நம்முடைய மிசா ஏழுமலை உடனடியாக, “தலைவர் கலைஞர் நம்முடைய பகுதிக்கு வருவதாக இருந்தால், என்னுடைய ரைஸ் மில்லை நான் தருகிறேன்” என்று சொன்னபோது, நம்முடைய தோழர்கள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள், “நீங்கள் தந்தால் உங்களுக்குப் பல கொடுமைகள் ஏற்படும்; உங்கள் மீது வழக்கு வரும்; நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்” என்றெல்லாம் கூட எச்சரித்திருக்கிறார்கள்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், எந்தக் கொடுமை வந்தாலும் சரி; கைது செய்யப்பட்டாலும் சரி, நான் தலைவர் கலைஞருக்கு இடம் கொடுப்பேன் என்று சொல்லி, அந்த ரைஸ் மில்லை அன்றைக்குத் துணிச்சலாக தந்தார்கள். அவ்வாறு தந்த காரணத்தால், இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் இருக்கும் எங்களோடு அவரைக் கொண்டு வந்து அடைத்தார்கள். இதுபோன்ற பல செய்திகள் உண்டு. அதேபோல, சீர்காழியில் குமாரசாமி என்கிற ஒரு கடை வியாபாரி. அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் கிடையாது. ஆனால் கட்சியின் அனுதாபியாக இருந்தவர். அவரையும் மிசா சட்டத்தில் கைது செய்து உள்ளே அடைத்தார்கள். கலைஞர் பேசுவதற்கு இடம் கொடுத்த காரணத்தினால், கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, இந்த கழகத்தை அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்களே, அவர்கள் கனவெல்லாம் நிச்சயம் பலிக்காது, எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது.விடக்கூடாது. வருகிற 11ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம். எனவே அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நாம் நம்முடைய உணர்வை வெளிப்படுத்த இருக்கிறோம்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், பி.எல்.ஓ.-க்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் இந்தப் படிவங்களை நிரப்பி அதைச் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரைக்கும், டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் மூன்று முறை அவர்கள் வர இருக்கிறார்கள்.
நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால், இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற முயற்சி இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே, குறிப்பாக ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
அதனால்தான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். திமுக நிர்வாகிகள் உதவிக்காக ஒரு தொலைபேசி எண்ணையும் அறிவித்திருக்கிறோம். ராகுல் காந்தி இதற்காகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, அரியானா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்று எல்லாம் ஆதாரப்பூர்வமாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது. வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும்.
இந்தப் பெரும் பொறுப்பை கழகத்தின் பிஎல்ஏ 2-க்கள் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாகக் கழகத்தின் பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் அமைச்சர் எஸ்.எம்.நாசர், எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், இ.பரந்தாமன், காரம்பாக்கம் க.கணபதி, துரை சந்திரசேகர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
* கர்நாடகா, அரியானா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
* அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது.
* வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும்.
* இந்தப் பெரும் பொறுப்பை கழகத்தின் பிஎல்ஏ 2-க்கள் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும்.
* தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாக பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும்.
* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெற்றிபெற பணியாற்ற வேண்டும்.