வேளாண்மைத் துறை சார்பில் 202 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 169 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 33 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேளாண்மைத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைத் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், உழவர்களின் நலன் காக்கவும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,
2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மை - உழவர் நலத்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1982 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 266 நபர்களுக்கும், என மொத்தம் 2248 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 60 வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 109 உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், வேளாண்மை-உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் (பிணையம்/பிணையமற்றது), ஆய்வக உதவியாளர், தட்டச்சர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 202 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர்
நா. முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் த.ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.