பணமதிப்பிழப்புக்கு பின்னர் தங்கத்தை பதுக்கும் பாஜக தலைவர்கள்: அகிலேஷ் யாதவ் பகீர் குற்றச்சாட்டு
லக்னோ: பணமதிப்பிழப்புக்குப் பிறகு பாஜகவினர் தங்கத்தைப் பதுக்குவதால்தான் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் பணத்தைச் சேகரித்த பாஜக, இப்போது தங்கத்தைக் குவித்து வருகிறது. பாஜக தலைவர்கள் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளதன் காரணமாகவே அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, சாதாரண மக்கள் சிறிய நகைகளைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘இரட்டை இயந்திர அரசு’ இருந்தபோதிலும் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பாஜக அரசு அவர்களை ஏமாற்றி வருகிறது. டீசல், பெட்ரோல், மின்சாரம் மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி அவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. பாஜக தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களால் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நிர்வாகச் சீர்கேடுகள், ‘இருமல் மருந்து ஊழல்’ தொடர்பான முறைகேடுகள் மற்றும் மதுபானக் கடத்தல் அதிகரித்துள்ளது’ என்று அவர் கூறினார்.