பிரசவத்தை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும்
*கர்ப்பிணி தாய்மார்களிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
நாகர்கோவில் : அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது :அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் வருகை பதிவு செய்யும் பிரிவு, பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து பார்வையிட்டு விவரங்கள் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்று பிரத்யேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வருகை தந்த கர்ப்பிணி தாய்மார்களுடன் கலந்துரையாடி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக குளிர்சாதன வசதி, 24 மணி நேரமும் வெந்நீர் வசதி, பிரசவ பகுதியில் ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையேயும் திரைச்சீலை மறைப்பு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பிரசவத்தினை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டுமென கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், ரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.