டெல்லியின் திட்டத்தை புரிந்து கொள்ளாமல் பவர் காட்டும் இலைக்கட்சி தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி ட்ரீட்மெண்ட் பேருல மருத்துவமனை சொகுசு பெட்டில் அட்மிட் ஆகி வெளி உணவுகளை சாப்பிட்டு பொழுதை கழிக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் மருந்து துறையில் சமீபத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசு பொறி வைச்சு பிடிச்சாங்க.. கைது நடவடிக்கைக்கான நடைமுறைகள் எல்லாம் முடிச்சு, கடைசியாக மருத்துவ பரிசோதனைக்காக அந்த மாவட்டத்துல இருக்கிற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க.. ஆனா போலீசு போகும்போதே ரெடியாக இருந்த ஒரு மருத்துவக்குழு, வேகம்வேகமாக அந்த நபரை பரிசோதனை செய்து முடிச்சு அட்மிஷன் என எழுதி கொடுத்துட்டாங்க.. பரிசோதனையில அவருக்கு பல்வேறு பிரச்னை இருக்கு.. இந்த சூழ்நிலையில் ரிமாண்ட் செய்ய தகுதி என்று நாங்க சர்டிபிகேட் தர முடியாது. அவரை அட்மிட் போடுங்க என கூறிட்டாங்க.. டாக்டரு சொன்னதால வேறு வழியில்லாமல் அட்மிட் போட்டாச்சு.. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கும் தகவல் தெரிவிச்சு, நீதிபதியே நேரில் வந்து பார்த்துட்டு ட்ரீட்மென்ட் முடிச்சு, உடனடியாக ரிமாண்ட் செய்ங்க என உத்தரவிட்டாரு.. ஆனால் கைதாகி நாலு நாள் ஆகியும் இன்னும் ட்ரீட்மெண்ட் முடியலையாம்.. பொது வார்டுல சொகுசு பெட்டில் அட்மிட் ஆகி வெளியில் இருந்து வரும் உணவுகளை உட்கொண்டு பொழுதை அந்த நபர் கழிச்சுட்டு வர்றாராம்.. பாவம் அந்த வார்டில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசு தான் செய்வதறியாமல் தவிக்கிறாங்களாம்.. தப்பிச்சு போய்ட்டாருனா, நம்ம வேலைக்கு தான் ஆபத்து என நொந்து போய் இருக்கிறார்களாம்..
இந்த மாதிரி பிரச்னைல்லாம் வரக்கூடாதுனு தான் கைதிகளுக்கு என தனி சிகிச்சை வார்டு இந்த ஆஸ்பத்திரியில் காக்கி உயர் அதிகாரி உத்தரவிட்டு தொடங்கினாங்களாம்.. அங்க போனா வெளி உணவு சாப்பிட முடியாது. வேறு யாரும் வந்து பார்க்க முடியாது என்பதால், கைதிகள் வார்டுக்கும் சம்பந்தப்பட்ட நபர் போக வில்லையாம்.. இதற்கெல்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கும் பெண் டாக்டரும், அவரது கணவரும் தான் காரணம் என்கிறார்கள்.. இவங்க நடத்தும் கிளினிக்கிற்கு, மருந்து சப்ளை எல்லாமே இப்போது கைதாகி அட்மிட் போட்டு இருக்கும் நபர் மூலம் தான் நடந்துக்கிட்டு இருக்காம்.. அதற்கு நன்றி கடனாக தான் இவரு டிஸ்சார்ஜ் ஆகி சிறைக்கு போகாமல், ஜாமீனில் நேரடியாக வெளியே போகணும் என்பதை குறி வைச்சு காய்நகர்த்தி வருவதாக பேசிக்கிறாங்க.. இத பார்த்து சிபாரிசு இருந்தா போதும் என சாமான்ய நோயாளிகள் தங்களுக்குள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்லியின் திட்டத்தை புரிந்து கொள்ளாமல் பவர் காட்டுறாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் டெல்லி சென்ற விவகாரத்தில் புது பூகம்பம் கிளம்பியிருக்காம்.. வழக்கமாக தலைநகர் செல்லும் இலைக்கட்சி தலைவர், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ரெண்டு பேரை கூட அழைச்சிக்கிட்டு போவாராம்.. அந்த ரெண்டு பேரும் மலராத கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களாம். அதில் ஒருவருடன் இலைக்கட்சி தலைவருக்கு விரிசல் ஏற்பட்டிருக்காம்.. அதனால், அவரை கழட்டி விட்டுட்டாராம்.. ஆனால், தென்மாவட்டங்களில் இருந்து பூட்டு நகரை சேர்ந்த வயதானவரை தன்னுடன் அழைச்சிட்டு போனாராம்.. தேனிக்காரருக்கு எதிராக செயல்படும் 5க்கும் மேற்பட்ட மாஜிக்கள் இருந்தாலும் அவர்களை ஓரம் தள்ளி வச்சிட்டாராம் இலைக்கட்சி தலைவர்.. அந்த வயதான பூட்டு நகரை சேர்ந்தவர், என்ன சொன்னாலும் தலையாட்டுவார், மற்றவர்களை அழைத்து சென்றால் வில்லங்கமாகி விடும் என்ற நோக்கத்தில் தான் கூட்டிக்கிட்டு போகலன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க...
அதோடு ஒன்றிய உள்துறை மந்திரிய பார்க்க போனவரு, வௌியே வரும்போது முகத்தை மூடிக்கிட்டு வந்திருக்காரு.. ஆனால், அவரது அடிப்பொடிகளோ வௌியே வரும்போது வேர்வையை துடைத்தாருன்னு சொல்றாங்களாம்.. உள்ளே நடந்த பேச்சுவார்த்தையில், தேனிக்காரர், குக்கர்காரர், சின்னமம்மி ஆகியோரை கட்சியில் சேர்த்தால் கூட்டணி நன்றாக இருக்கும் என உள்துறை மந்திரி சொன்னாராம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ முடியவே முடியாது. அவர்களை தனிக்கட்சி தொடங்க வைத்து, கூட்டணியில் நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிடிவாதமாக இருந்தாராம்.. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜ வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், எதிர் காலத்தில் நிரந்தரமாக காலுன்றினால் போதும் என்ற நிலையில் தான் இருக்காங்களாம்.. மற்றொரு புறத்தில் இலைக்கட்சி தலைவரோ, நடிகர் கட்சியுடன் பேசிக்கிட்டே இருக்காராம்.. இதன் காரணமாகத்தான் முரண்டு பிடிச்சிக்கிட்டு இருக்காராம்.. இதனை தெரிந்து கொண்ட மலராத கட்சியோ, அவரை வெளியேற விடாமல் இலைக்கட்சி தலைவர் சொல்வதை கேட்டுக்கிட்டே இருக்காங்களாம்.. எந்த பக்கமும் அவரை விட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் டெல்லி, கடைசி நேரத்தில் இலைக்கட்சியை சுக்குநூறாக உடைத்து தேர்தலை சந்திக்குமாம். கோபிக்காரரை முன்நிறுத்துவதுடன், சில தொகுதிகளில் வெற்றி பெற செய்து, இலைக்கட்சி தலைவரை மூழ்கடிக்கும் வகையில் தான், அவர் சொல்வதை கேட்டுக்கிட்டு அவரது தோள்மீது கையை போட்டுக்கொண்டு அழைச்சிக்கிட்டு போறாங்களாம்.. இந்த விவரம் தெரியாமல் இலைக்கட்சி தலைவர், தனக்கு அதிக பவர் இருப்பதாக நினைச்சிக்கிட்டிருப்பதாக தேனிக்காரரின் அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.