காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. அசால்டாக டீல் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!!
டெல்லி : டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் காலணியை வீசியுள்ளார். அப்போது பாதுகாவலர் ஒருவர் உடனடியாக அந்த காலணியை தடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நீதிமன்ற காவலர்கள் அப்புறப்படுத்திய போது, இந்துஸ்தானில் சனாதனம் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த வழக்கறிஞர் முழக்கமிட்டுள்ளார். இதனிடையே இது போன்ற சம்பவங்களால் தனது கவனத்தை யாரும் சிதறடிக்க முடியாது என்றும் இது தன்னை பாதிக்காது என்றும் கூறிய தலைமை நீதிபதி பி.ஆர்.க்வாய், வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு, எந்த பதற்றமும் அடையாமல் வழக்கு விசாரணை பணியை தொடர்ந்துள்ளார். காலணியால் தாக்க முற்பட்ட வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.