டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: சமூக வலைதளம் மூலம் சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் பற்றி திடுக் தகவல்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை எதிரே கார் குண்டுவெடிப்பு சம்பந்தமாக 4 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முசாபர் என்பவரை தேடி வருகின்றனர். டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பு பயங்கரவாதிகள் அந்த தாக்குதலை எப்படி நடத்துவது?, தாக்குதலுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை எவ்வாறு உருவாக்குவது? என்பதை யூடியூப் மூலம் அறிந்துள்ளனர்.
அல்பலா பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கட்டளையிட்டவர்கள் உகாசா பைசான், ஹாஸ்மி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் உமர் முகமது, அதில் ராதர் மற்றும் முசாமில் ஷகீல் உள்ளிட்டோர் சிரியா அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த கட்டளைதாரிகள், இந்தியாவில் இருந்தே வேலைகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் ‘டெலிகிராம்’ மற்றும் ‘மாஸ்டோன்’ செயலியை பயன்படுத்தி தகவல்களை பறிமாறியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செயற்கை நுண்ணறிவையும் (ஏ.ஐ.) அதிகம் பயன்படுத்தி உள்ளார்கள்.