பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
புதுடெல்லி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வலுப்படுத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம், தகவல் பகிர்வு மற்றும் கூட்டு பயிற்சிகளை உள்ளடக்கியது.இந்த ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதையடுத்து இந்தியா மீது 50 % வரிகளை அமெரிக்க அதிபர் அறிவித்தார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவு இதுவரை இல்லாத அளவு வலுவடைந்துள்ளது. இந்த 10 ஆண்டு ஒப்பந்தம், நமது கூட்டு உறவின் புதிய யுகத்தைத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.