சிலர் மக்களிடம் அவதூறு பரப்பி வருகின்றனர்; அது எந்த வகையிலும் எங்களை பாதிக்காது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி!
டெல்லி: சிலர் மக்களிடம் அவதூறு பரப்பி வருகின்றனர். அது எந்த வகையிலும் எங்களை பாதிக்காது. அனைத்து கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறது. பீகார் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது' என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டியளித்துள்ளார். வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில் தேர்தல் ஆணையர்கள் விளக்கமளித்துள்ளது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போன்ற சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் சிக்கி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; "எங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம். அரசியல் கட்சிகளுக்கு இடையே நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி தான் SIR நடவடிக்கை. பீகாரின் SIR நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குள்ளது.பீகாரைப் போல பிற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எப்போது மேற்கொள்வது என தேர்தல் ஆணையர்கள் கூடி முடிவெடுப்போம்
இந்த விவகாரத்தில் போலியான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்டுகின்றன. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை. எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் தங்கள் புகாரை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டும்.
நாட்டில் பலருக்கும் தங்குவதற்கு வீடு இல்லை. இரவில் சாலையோரம், மேம்பாலத்துக்கு கீழே உறங்குவார்கள். ஆனால், அவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதனால்தான், முகவரியில் '0' என குறிப்பிட்டிருக்கும்.
ஏழைகளை போலி வாக்காளர்கள் என எப்படிச் சொல்ல முடியும்?. வாக்காளர்களை குறிவைத்து, தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளைக் கண்டு மக்களும் அஞ்மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் பயப்படாது" என கூறினார்.