உறுப்பு தானத்தால் மதங்களைக் கடந்த மனிதநேயம்; இறந்த சகோதரியின் கைகளால் ‘ராக்கி’ அணிந்து கொண்ட சகோதரன்: குஜராத்தில் நெகிழ்ச்சி
காந்திநகர்: உறுப்பு தானத்தால் இணைந்த மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இருவேறு மத குடும்பங்கள், ரக்ஷா பந்தன் திருநாளில் பாசத்தால் பிணைந்து சரித்திரத்தில் நெகிழ்ச்சியான அத்தியாயத்தை படைத்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 15 வயது மாணவி அனம் தா அகமது என்பவர், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தபோது, 11,000 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பி தாக்கியதில் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவரது வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள் மூலம் இடது கை காப்பாற்றப்பட்டாலும், இந்த சம்பவம் அவரை மனதளவிலும் உடலளவிலும் பாதித்தது.
இந்த நிகழ்வுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தின் வல்சாத் நகரில் வசித்த நான்காம் வகுப்பு மாணவி ரியா என்பவர், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். ரியாவின் மரணம் அவரது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய போதிலும், வல்சாத்தின் புகழ்பெற்ற மருத்துவர் உஷா மஷ்ரியின் வழிகாட்டுதலின் பேரில், ரியாவின் பெற்றோர் திருஷ்ணா மற்றும் பாபி மிஸ்திரி, தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ‘டொனேட் லைஃப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், இறந்துபோன ரியாவின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், குடல், கண்கள் மற்றும் கைகள் தானமாகப் பெறப்பட்டன.
இதனையடுத்து ரியாவின் வலது கை, மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஏற்கனவே ஒரு கையை இழந்திருந்த அனம் தா அகமதுவிற்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. உலகிலேயே தோள்பட்டை அளவில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் பெண் என்ற பெருமையை அனம் தா பெற்றார். இந்நிலையில், இரு குடும்பங்களையும் இணைத்த ரக்ஷா பந்தன் திருநாளன்று, வல்சாத் நகரில் உள்ள டிதால் கடற்கரையில் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது. மும்பையிலிருந்து பயணம் செய்து வந்த அனம் தா அகமது, தனது சகோதரனாக ஏற்றுக்கொண்ட சிவமின் (ரியாவின் சகோதரர்) மணிக்கட்டில் ராக்கி கயிற்றைக் கட்டினார்.
இதுகுறித்து சிவம் கூறுகையில், ‘என் அன்புச் சகோதரி ரியாவே நேரில் வந்து எனக்கு ராக்கி கட்டுவது போல் உணர்ந்தேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் சிவமின் தாய் கூறுகையில், ‘மகளை இழந்த எங்களுக்கு, அனம் தாவின் உருவத்தில் இன்னொரு மகள் கிடைத்துள்ளார். ரியாவுக்குப் பிடித்த குலாப் ஜாமூனை செய்தேன். அதனை அனம் தா விரும்பி சாப்பிட்டார்’ என கண்ணீருடன் தெரிவித்தார். அதற்கு அனம் தா அகமது, ‘இனி நான் அனம் தா அகமது மட்டுமல்ல, ரியாவும் கூட’ என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். இவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு மதங்களை கடந்த மனித நேயமிக்கதாக உள்ளதை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.