ரூ.15 லட்சம் கடன் வாங்கிய அண்ணன் ஓட்டம் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தம்பி வெட்டி படுகொலை: பாஜ நிர்வாகி கைது
ஒரத்தநாடு: அண்ணன் வாங்கிய கடனுக்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தம்பியை வெட்டி படுகொலை செய்த பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல்(38). இவர், 2 ஆண்டுகளுக்கு முன் பேராவூரணி வடக்கு ஒன்றிய பாஜ தலைவரான, மேட்டுவயல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரிடம் (39) ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தை தராமல் சக்திவேல் கடந்த ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்துள்ளார். இதுதொடர்பாக ராஜேஷ்குமார் பலமுறை சக்திவேல் குடும்பத்தினரிடம் வந்து பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29), கடந்த 20 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். தகவலறிந்து ராஜேஷ்குமார், ேநற்றுமுன்தினம் இரவு சக்திவேல் வீட்டுக்கு சென்று பிரகதீஸ்வரனிடம், அண்ணன் வாங்கிய ரூ.15 லட்சம் கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஷ்குமாரை தேடி வந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.