தர்மபுரி அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
*கிராம மக்கள் அதிர்ச்சி
தர்மபுரி : தர்மபுரி அருகே, ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.தர்மபுரி அருகே உள்ள மாதேமங்கலம் ஊராட்சி, வெங்கட்டம்பட்டி கிராமத்தில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் தண்ணீர் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும், 100 ஏக்கர் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தொடர் மழையால் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து நிரம்பி காணப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள், நேற்று காலை திடீரென செத்து மிதந்தன. இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த கிராம மக்கள், ஏரி கரைக்கு விரைந்து சென்று கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்தை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஏரி தண்ணீரை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஏரி நீரை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
ஆடு-மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏரி தண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் இறந்தனவா, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.