அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். மேலும், இப்பகுதி மக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும். இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது.
இதனால், இந்த கட்டிடம் கடந்த 10 வருடங்களாக சேதமடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்து, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. அதனால், இதனை யாருமே பயன்படுத்தவில்லை. இதனால், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தான் தற்போது ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் இப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். எனவே, பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை அகற்றி புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.