வேதாரண்யம் ஒன்றியத்தில் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் டிட்வா புயல் காரணமாக முல்லை பூ சாகுபடி பாதிப்பு
*மழை கால நிவாரணம் வழங்க கோரிக்கை
வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, நெய்விளக்கு, பன்னாள், மருதூர், பஞ்சநதிக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லை பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த முல்லைப் பூ சாகுபடி விவசாயிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி 5 ஆயிரம் ஆண், பெண் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரையில் முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் முல்லைபூ தோட்டத்தில் அதிகாலை சுமார் 4 மணி முதல் 8 மணி வரை செடிகளில் இருந்து கூலித்ெதாழிலாளர்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களால் எடுக்கப்படும் பூக்கள் வியாபாரிகளால் சேகரிக்கப்பட்டு நாள் தோறும் 5 முதல் 10 டன் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது மழை காரணமாக பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டிட்வா புயல்காரணமாக பெய்த கனமழையால் முல்லைப் பூச்செடிகள் இலைகள் முற்றிலும் உதிர்ந்து சாகுபடி இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்ற வாரம் வரை 100 செடிக்கு சுமார் 3 கிலோ பூக்கள் கிடைத்த நிலையில் தற்போது அரை கிலோ மட்டுமே கிடைக்கிறது எனவே கடும் பாதிப்புக்கு உள்ளான முல்லை பூ சாகுபடி விவசாயிகளுக்கு அரசு மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு வழங்குவது போல் மழைக்கால நிவாரணம் முல்லை பூ சாகுபடிதார்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும் முல்லை பூ சாகுபடி விவசாயிகளுக்கும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் அரசு தேவையான வங்கி கடன் உதவிகளும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லை பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.