சென்னையில் கடந்த ஜூன் மாதத்தின் புகார்தாரர்கள் இழந்த ரூ.2.98 கோடி மீட்பு: சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை: கடந்த ஜூன் 2025 மாதத்தில் சென்னை காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ.2,96,12,994/- மீட்கப்பட்டுள்ளது. சென்னை காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சைபர் புகார் சார்ந்த வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும், இணைய வழி மூலமாக பல்வேறு சமூக வலைதள பதிவு மற்றும் தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளின் உரிய தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, இழந்த பணத்தொகையை மீள இழந்தவர்கள் வங்கி கணக்கில் மீட்டு வழங்குவதிலும், இழந்தவர்களுடைய பணத்தை மற்றொரு வங்கி கணக்கில் அனுப்பகோரி சிலர் ஏமாற்றப்பட்டிருப்பதும் வழக்கு சார்ந்து வங்கி கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டு உரிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீள பெற்று தருவதிலும் சென்னை காவல் துறை முன்னிலை வகிக்கிறது.
சென்னை காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகள் திறம்பட துரிதமாக விசாரணை மேற்கொண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தாக்கலான 15 புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.2,30,02,357/- மீட்கப்பட்டும், வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 16 புகார் மனுக்களில் ரூ.18,27,998/- மீட்கப்பட்டும், மேற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 31 புகார் மனுக்களில் ரூ.11,14,767/- மீட்கப்பட்டும், தெற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 62 புகார் மனுக்களில் ரூ.29,00,881/- மீட்கப்பட்டும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 22 மனுக்களில் ரூ.7,66,991/-மீட்கப்பட்டும் மொத்தமாக 146 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் பணம் ரூ.2,96,12,994/- ( ரூ.2 கோடியே 96 லட்சத்து 12 ஆயிரத்து 994 ரூபாய்) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025ம் ஆண்டு இதுவரை ரூ.15,30,22,423/- ( ரூ.15 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரத்து 423 ரூபாய்) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இணைய வழி பண பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் உரிய நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்திடவும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் சென்னை காவல்துறை மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது.