உத்தரப்பிரதேசத்தில்தான் இந்த அவலம்: ‘உறவு’க்கு மறுத்த மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர கணவன்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியில் இருந்து கணவன் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்தவர் தீஜா (26). இவருக்கும் முகேஷ் அஹிர்வார் என்பவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடம் வரை இருவரும் ஜாலியாக இருந்தனர். அதற்கு பிறகு முகேஷின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி தீஜாவை அடித்து துன்புறுத்தி விட்டு வெளியே சென்று விடுவார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வெகு நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார் முகேஷ். அப்போது தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டார். நேற்று, மீண்டும் அதுபோன்று செய்ய முயன்றபோது தீஜா கோபத்துடன் எதிர்த்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், தீஜாவை அடித்து உதைத்தார். ஒரு கட்டத்தில், தாங்கள் வசிக்கும் 2 மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு தூக்கி சென்று அங்கிருந்து கீழே போட்டார். இதில் பலத்த காயமடைந்த தீஜா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.