வீட்டு வாசலில் கிடந்த 10 அடி நீள முதலை: சிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம்: வீட்டு வாசலில் கிடந்த 10 அடி நீளம் ராட்சத முதலையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருண் பிரபு. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் நேற்று காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் 10 அடி நீளமும், 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினரும் முதலையை பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டு வாசலில் கிடந்த ராட்சத முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.