குற்ற வழக்கு நீதிமன்றத்திற்கு ஆதவ் அர்ஜுனா மனு மாற்றம்
சென்னை: கரூரில் 41 பேர் பலியான நிலையில் தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதவில், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளம் நாடுகளைப் போல ஜென் இசட் புரட்சி ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். அவர் மீது கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு செய்திருந்தார். அதில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கி விட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய எக்ஸ் தள பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை. காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி வஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்ற வழக்கான இந்த மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று கூறி மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.