குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி
புதுடெல்லி: அனைத்துவித குற்றவாளிகளுக்கு எதிராகவும் இரக்கமற்ற அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் என்ற இரண்டுநாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மத்திய புலனாய்வு பிரிவு(சிபிஐ) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், சைபர் குற்றவாளிகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலைப்பின்னல்களின் ஒருபகுதியாக இருந்தாலும், தப்பியோடிய குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் இரக்கமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஊழல், குற்றம் அல்லது பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியாவுக்கு வௌியில் இருந்து செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அவர்கள் அனைவரும் இந்திய நீதி அமைப்பின்முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் சட்டவரம்புக்குள் கொண்டு வரவும், இதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.