புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது தம்பி கார்த்திக்(29). கூலித்தொழிலாளர்கள். இதில் கண்ணனுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. கார்த்திக்குக்கு திருமணமாகவில்லை. இவர்கள் இருவரும் நேற்றிரவு 11 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடியார்குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் சரமாரி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து கொலைகள் செய்தது யார், எதற்காக சகோதரர்கள் கொல்லப்பட்டனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.