மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என ஒன்றிய சுகாதாரத் துறை கட்டுப்பாடு கொண்டுவர முடிவு
டெல்லி: மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்துள்ளது. கலப்பட இருமல் மருந்தால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் புதிய கட்டுப்பாடு வருகிறது. தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் மோசமடைந்ததும் அடுத்தடுத்து உயிரிழப்பு நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இருமல் சிரப்பை உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்ததாக தெரியவந்து உள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு விரைந்தது. குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை ம.பி. போலீசார் கைது செய்துதனர்.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என ஒன்றிய சுகாதாரத் துறை கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.