மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மேயரின் கணவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், அவர் உடல்நல பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் கடந்த 2022, 23ம் ஆண்டுகளில் வீடுகள், வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இது தொடர்பான வழக்கை டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இக்குழுவினர் மாநகராட்சி சொத்து வரி குழுத்தலைவராக இருந்த விஜயலட்சுமியின் கணவரான கண்ணனை காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, தற்போது தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் (57), மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பொன்.வசந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று காலை அழைத்துச் சென்றனர். அங்கு பொன்.வசந்திற்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 114வது வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வராத நிலையில், நேற்றிரவு மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மாநகராட்சி வரி வசூல் முறைகேடு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடமும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.