கப்பர்சிங் வரி
இது கப்பர்சிங் வரி என்றார் ராகுல்காந்தி. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது அவரது கருத்து. ஷோலே படத்தின் படுகொடூர வில்லன் கப்பர்சிங். அதைப்போன்ற கொடூர வரி என வர்ணித்து ராகுல் இதை கூறியிருந்தார். எப்போதும் போல் ராகுல்காந்தி கடுமையாக அப்போதும் விமர்சனம் செய்யப்பட்டார். இன்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு யூடர்ன் அடித்து இருக்கிறது. 5,12,18,28 சதவீத 4 அடுக்கு வரிகளை தற்போது 5, 18 சதவீதமாக குறைத்து இருக்கிறது. இது மிகப்பெரிய சேமிப்பு திருவிழா என்கிறார் பிரதமர் மோடி.
8 வருடம் நாட்டு மக்களை ஜிஎஸ்டி வதைத்து எடுத்து விட்டது. 2018ல் வசூல் ரூ.7.19 லட்சம் கோடி. 2019ல் ரூ.11.77 லட்சம் கோடி, 2020ல் ரூ. 12.22 லட்சம் கோடி, 2021ல் ரூ. 11.36 லட்சம் கோடி, 2022ல் ரூ.14.76 லட்சம் கோடி, 2023ல் ரூ.18.10 லட்சம் கோடி, 2024ல் ரூ.20.18 லட்சம் கோடி, 2025ல் இப்போது வரை ரூ.10 லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வசூலாகி இருக்கிறது. இந்த நேரத்தில் திடீரென ஜிஎஸ்டி வரியை இரண்டு அடுக்காக குறைத்து மிகப்பெரிய சாதனையை புரிந்து விட்டதாகவும், இது தனது ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்றும் மார்தட்டிக்கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. ஜிஎஸ்டியை அமல்படுத்தியது யார்? பிரதமர் மோடி தான். அதை இரண்டு அடுக்காக குறைத்து ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி விட்டதாக மிகப்பெரிய பிரசாரத்தை முன்னெடுத்துக்கொண்டு இருப்பது யார்? பிரதமர் மோடி தான்.
2017ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது ஒற்றை அடுக்கில் வரி விதிக்க வேண்டும், எளிமைப்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குரல் அரசுக்கு கேட்கவே இல்லை. அதிலும் குறிப்பாக ஜிஎஸ்டியை விமர்சனம் செய்த ராகுல்காந்தி கேலி செய்யப்பட்டார். 2017 முதல் இன்று வரை நாட்டு மக்களிடம் ரூ. 105 லட்சம் கோடியை வரியாக உறிஞ்சி எடுத்து இருக்கிறது மோடி அரசு. சாதாரண, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து இந்தப்பணம் பறிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களை விட மிகவும் கொடூர வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
எத்தனையோ முறை, எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்த்தும், மிருக பலத்துடன் இருந்த மோடியின் காதுக்கு, ஏழை, எளிய மக்களின் அழுகுரல் கேட்கவில்லை. ஆனால் இன்று திடீரென விழித்துக்கொண்டு, ஏதோ நேரு பிரதமராக இருந்த போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போலும், தற்போது தனது ஆட்சிக்காலத்தில் ஜிஎஸ்டியை குறைத்து, மக்களின் கஷ்டத்தை போக்கி விட்டது போலும் பேசிக்கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘கப்பர் சிங் வரி’யால் அழிந்த குடும்பங்கள் எத்தனை? நாட்டில் அழிந்து போன சிறுகுறு தொழில்கள் எத்தனை?
அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி விதித்த கொடூர அரசல்லவா மோடி அரசு? அதை எல்லாம் எப்படி மறக்க முடியும்? எப்படி மன்னிக்க முடியும்? இது ஏழை, எளி மக்கள் மீது நடத்தப்பட்ட பொருளாதார அநீதி தாக்குதல். இப்போது கூட அமல்படுத்தப்பட்டு இருப்பது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அல்ல. இந்த வரி கட்டமைப்பு சீர்திருத்தம் கடந்த 8 ஆண்டுகளில் 900 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது. அத்தனை கொடூரங்களும், சிக்கல்களும் நிறைந்தது ஜிஎஸ்டி. இந்த கப்பர்சிங் வரியை குறைத்து விட்டதாக இன்று திருவிழா எடுக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.