தொடர் விடுமுறை எதிரொலி.. கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அரசு பேருந்துகளில் பயணம்!
சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. நேற்று முன்தினம் (14.08.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படியும் மற்றும் நேற்று (15.08.2025) அதிகாலை 3 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 1,160 சிறப்புப் பேருந்துகள் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,78,860 பயணிகள் பயணம் செய்தனர்.
13-ந்தேதி தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 436 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,35,040 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் கடந்த 13.08.2025 முதல் 15.08.2025 அதிகாலை 3 மணி வரை 5,780 பேருந்துகளில் 3,13,900 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.