இந்திய ராணுவத்தை நம்பாமல் பாக். பயங்கரவாதிகளை காங். ஆதரிக்கிறது: அசாமில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மங்கல்தோய்: ‘இந்திய ராணுவத்தை நம்பாமல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாக்கிறது’ என அசாமில் பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திற்கு நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, அங்கு நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தர்ராங் மாவட்டத்தில் ரூ.6,300 கோடி மதிப்பிலும், நுமாலிகர் மாவட்டத்தில் ரூ.12,200 கோடி மதிப்பிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அங்கு நடந்த பொதுக் கூட்டங்களில் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்த இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக பாகிஸ்தானால் வளர்க்கப்படும் தீவிரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காமாக்யா அன்னையின் ஆசீர்வாததால் ஆபரேஷன் சிந்தூரில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த மண்ணின் மைந்தனான சமூக சீர்த்த பாடகரும், நடனக் கலைஞருமான பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த 2019ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ‘பாஜ கட்சி கூத்தாடிகளை கவுரவிக்கிறது’ என கூறியிருக்கிறார். 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது அசாம் மக்களுக்கு நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், பூபன் ஹசாரிகாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காயத்தில் உப்பு தடவுவது போன்றது.
ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்த நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்து, விவசாயிகள் அந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ததற்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பாராட்டுகிறேன். ஒரு காலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இப்போது விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் கைகளில் விவசாயப் புரட்சியைக் காண்கின்றன. சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் நிலத்தை அபகரிக்க, பெண்கள் மற்றும் சிறுமிகளை அவமதிக்க, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மக்கள்தொகையை மாற்றியமைக்கும் சதியை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது. இன்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முழு தேசமும் ஒற்றுமையுடன் முன்னேறி வருகிறது. வளர்ந்த இந்தியா என்பது நாட்டு மக்களின் கனவு மற்றும் தீர்மானம். அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.