மாநாடுகள், நிகழ்ச்சிகள் நடத்த கன்னியாகுமரியில் அரசு சார்பில் வர்த்தக மையம் அமையுமா?: சர்வதேச தரத்துடன் அமைக்க கோரிக்கை
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மாநாடுகள், கூட்ட அரங்குகள் நடத்த வசதியாக அரசு சார்பில் வர்த்தக மையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரம் மட்டுமல்ல, சர்வதேச சுற்றுலா தலமாகவும் உள்ளது. இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த நகரங்களில் ஒன்றாகும். இதனால் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இது மட்டுமின்றி மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இது போன்ற கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் எல்லாம் அங்குள்ள லாட்ஜூகளில் உள்ள கூட்ட அரங்குகளில் தான் நடக்கிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் பெரிய அளவில் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த, தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரிக்கு பல்வேறு விஐபிகள், அரசியல் பிரமுகர்கள் அதிக அளவில் அடிக்கடி வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு போதிய கட்டமைப்பு இட வசதிகள் இல்லை. இது போன்ற காரணங்களால் விஐபிகள் அரசியல் பிரமுகர்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, இயற்கை விவசாய கண்காட்சி, சுற்றுலா துறை சம்பந்தமான நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் போதிய கட்டமைப்பு வசதிகள் தற்போது கன்னியாகுமரியில் இல்லை.
கேரள அரசின் சுற்றுலா துறை சார்பாக வேளி சுற்றுலா கடற்கரையில் உலக தரத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மக்களை கவரும் வகையில் 27,000 சதுர பரப்பளவில் 750 இருக்கைகள் 300 விருந்தினர் உணவு பரிமாறும் பெரிய அறை, 600 வாகன நிறுத்தும் இடங்களில் கூட்ட அரங்கு மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இது போன்று ஒரு தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை சார்பாக அமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கன்னியாகுமரியில் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கம் ( Kanniyakumari Convention & Exhibition Centre or Kanniyakumari Trade Center) புதிதாக நான்கு வழி சாலை மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி உள்ளனர்.
இது குறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில், சென்னையில் இது போன்று சென்னை டிரேடு சென்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனிநபர் திருமண நிகழ்ச்சிகள் கூட அதிக அளவில் இங்கு நடத்துவதற்கு மக்கள் முன்வருவார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு சார்பாக கன்னியாகுமரி டிரேட் சென்டர் கன்னியாகுமரியில் உலக தரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள ரயில் நிலையம் பாலத்துக்கும் , நான்கு வழிச்சாலை பகுதியிலும் இடம் கையகப்படுத்தி, இந்த கன்னியாகுமரி டிரேட் சென்டர் அமைந்தால், பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என கூறி உள்ளனர்.