இசை நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்ததால் வந்த வினை; கணவரிடம் விவாகரத்து கோரிய பெண் பிஆர்ஓ: பதவியை இழந்த நிலையில் திடீர் திருப்பம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஜூலை 16 அன்று கோல்ட்பிளே இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ‘அஸ்ட்ரோனமர்’ என்ற பிரபல நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆண்டி பைரன் மற்றும் அதன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டன் கேபோட் ஆகியோர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி இருந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த ‘லைவ் கேமரா’ மூலம் திரையில் ஒளிபரப்பானது. இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆண்டி மற்றும் கிறிஸ்டன் ஆகிய இருவரும் தங்கள் பதவிகளைத் துறந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கிறிஸ்டன் கேபோட் தனது கணவரான ஆண்ட்ரூ கேபோட்டை விவாகரத்து செய்யக்கோரி நியூ ஹாம்ப்ஷயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவாகரத்து குறித்து கிறிஸ்டனின் கணவர் ஆண்ட்ரூ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றும், தங்களுக்குள் ஏற்கனவே மணவாழ்க்கையில் விரிசல் இருந்ததாகக் கூறி இந்த சம்பவத்தை அவர் கடந்து செல்ல முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள குடும்ப நண்பர்கள், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே இருவரும் அவ்வாறு நாடகமாடுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான், கிறிஸ்டன் மற்றும் ஆண்ட்ரூ தம்பதி சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். மேலும், இதுகுறித்து ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி ஜூலியா கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து நான் ஆண்ட்ரூவிடம் கேட்டபோது, அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். இது அவருக்கு மூன்றாவது விவாகரத்து. அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல; தற்போது அவருக்கு கிடைத்தது அவரது வினைப்பயன்’ என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார். இதனால், உண்மையாகவே தம்பதிக்கு இடையே பிரச்னை இருந்ததா அல்லது கட்டிபிடி சம்பவத்தால் அவமானத்தைத் தவிர்க்க விவாகரத்து நாடகமாடுகிறார்களா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.