காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு!
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி மகுடம் சூடினார்.
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.
84 கிலோ 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார். காயம் காரணத்தால் 31 வயதான மீராபாய் சுமார் ஓராண்டுக்கு பிறகு களம் கண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மீராபாய் 48 கிலோ எடைப்பிரிவில் இதற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 2 காமன்வெல்த் பதக்கமும் வென்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.