விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
*கலெக்டர் தலைமையில் ஆலோசனை
விழுப்புரம் : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் 25ம்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற சிறப்பான நிகழ்ச்சி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரால் புதுமைபெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 25ம் தேதி மாலை 4 மணி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களையும் வண்ணத்திரை மூலமாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாட்டினை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தயார் செய்திட வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே அவரவர் பெற்றோர்களிடம் தகவல்களை தெரிவித்திட அறிவுறுத்த வேண்டும். அன்று மாலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எவ்வித இடையூறும் இல்லாமல் மாணவர்கள் செல்வதற்கு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிகளில் காவல் துறையின் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் ஆகாஷ், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் மலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.