ராயப்பேட்டையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரமா என போலீசார் விசாரணை
சென்னை: ராயப்பேட்டையில் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் மத்தாய்(55). இவர் அவ்வை சண்முகம் சாலையில் மெத்தை தயாரித்து விற்பனை செய்யு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லிபினா(18) என்ற மகள் உள்ளார். லிபினா ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று பெற்றோர் கடைக்கு சென்ற பிறகு, மாணவி லிபினா கல்லூரிக்கு சென்றார். பிறகு மாலை வீட்டிற்கு வந்த அவர், அப்போது அவரது பெற்றோர் மாணவியிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பிறகு இரவு மீண்டும் மாணவிக்கு அவரது பெற்றோர் போன் செய்த போது அவர் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மாணவி படுக்கை அறையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது, மாணவி இறந்தது தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து ஐஸ் அவுஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாணவி கடைசியாக யாரிடம் பேசினார். குடும்ப பிரச்னையா? அல்லது காதல் விவகாரமாக என மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.