விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்திற்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டஈடு: கடலூர் கோர்ட் உத்தரவு
கடலூர்: விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்திற்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டஈடு வழங்க கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் - 6 சேர்ந்தவர் கதிர்வேல். என்.எல்.சி. அதிகாரி. இவருடைய மனைவி மலர்விழி.சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12 -ம் தேதி சிதம்பரம் - கீரப்பாளையம் சாலையில் வயலூரில் மோட்டார் சைக்கிளில் மலர்விழி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லோடு வேன் மோதியதில் மலர்விழி காயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த பேராசிரியர் மலர்விழி கணவர் கதிர்வேல், மகன் கார்த்திக் வேல் ஆகியோர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு வழக்கு கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 யில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறந்த பேராசிரியர் மலர்விழி குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் , செலவு தொகையுடன் என மொத்தம் ரூ. 1 1/2 கோடி நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.