கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரத்து தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரத்து செய்யப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பிரதமர் மோடி கோவை வருகிற நிலையில் அந்த நகரம் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அனுமதியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகிற வகையில் செயல்பட்டு வருகிற மோடியை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ‘திரும்பிப் போ, திரும்பிப் போ” என்று குரல் கொடுக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. மோடிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்: 2011ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, கோவை, மதுரை மாநகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்திருக்கிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 24 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டங்களை நிராகரித்து விட்டு, பிரதமர் சிறிதும் வெட்கமின்றி கோவை மாநகருக்கு வருகிறார் என்பதில் தமிழக மக்களுக்கு திருப்தி இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிகழ்கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார்: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது தமிழகத்திற்கு இழைத்த மாபெரும் அநீதியாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் ஆக்ரா, மகாராஷ்டிராவில் நாக்பூர், பீகாரில் பாட்னா மற்றும் போபால் போன்ற நகரங்களுக்கு ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள அந்த மாநகரங்களுக்கு எப்படி ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது? கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு காட்டாட்சி மத்தியில் இருப்பதால்தான் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
கல்வி போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, பேரிடர் காலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, தமிழர்களின் கலாச்சார பண்பாட்டை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளை வெளிக்கொணர மறுப்பு, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு இப்படி மோடி அரசின் தமிழக துரோகத்தில் மெட்ரோ ரயில் திட்ட மறுப்பும் இப்போது இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய பாஜ மோடி அரசின் தமிழக - தமிழ் மக்கள் துரோகத்தை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.