கோவை வழியாக கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் வெடிபொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது தீவிரவாதிகளுடன் தொடர்பா?
மதுக்கரை: கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் வெடி பொருட்கள் கடத்தி வருவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுக்கரை போலீசார் நேற்று அதிகாலை மதுக்கரை எல்என்டி பைபாஸ் ரோட்டில் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் வேனுக்குள் ஏறி பார்த்தனர். அதில், பெட்டி, பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தன.
மொத்தம் 75 பெட்டிகளில் தலா 200 ஜெலட்டின் குச்சிகள் வீதம் 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதும், அவற்றை சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் மலப்புரம் ஹரிம்பரா பகுதியை சேர்ந்த சுபேர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வெடி பொருட்கள் சேலத்தில் எங்கு வாங்கப்பட்டது?, எதற்காக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது? பொருட்களை கடத்தி வரச்சொன்னது யார்?, இவர்களுக்கு பின்னணியில் இருப்பது யார்?, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.