கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர்
கோவை: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை சேப்பாக்கம் மைதானம் போல கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.18 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவையில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்கள் தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 20.18 ஏக்கரில் மைதானமும், 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. 30 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் அமைக்கப்படும் கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், உயர்தர இருக்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், வீரர்கள் ஓய்வறை, விரிவுரை அரங்குகள், கிளப்ஹவுஸ்,விஐபி அறைகள், கார்ப்பரேட் அறைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.