கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; மனித மிருகங்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட மனித மிருகங்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் தனியார் கல்லூரி மாணவி தமது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால், அவர்களின் காரை தடுத்து நிறுத்திய கும்பல், அதன் கண்ணாடிகளை உடைத்து மாணவியையும், அவரது நண்பரையும் வெளியே இழுத்துள்ளனர். நண்பரைத் தாக்கி காயப்படுத்திய அவர்கள், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை இன்று காலை அங்குள்ள புதரில் கண்டெடுத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.