கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காப்பி பயிர்கள் விலை உயர்வு: மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் அரபிக்கா வகை காப்பி பயிர்கள் வரலாறு காணாத அளவில் கிலோ ரூ.600 வரை விற்பனையாவதால் மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களாக பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, மங்களம்கொம்பு, பாச்சலூர், பன்றிமலை உள்ளிட்ட 10க்கும் மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்கள் பழநி தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமங்களில் 28 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அரபிக்கா வகை காப்பி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தாண்டிக்குடி கிராமத்தில் மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் காப்பி விவசாயத்தின் பயிரிடும் முறை, பராமரிப்பு முறை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
காப்பி 6 மாதங்கள் பராமரிக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மலைக்கிராமங்களில் சுமார் 7,000 மில்லியன் டன் காப்பி கிடைப்பதாகவும் தெரிகிறது. இங்கு விளைவிக்கப்படும் காப்பி தரமாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலவிய புயல் காரணமாகவும் காப்பி விவசாயம் அங்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கிலோ ஒன்றிற்கு ரூ.350 வரை காப்பி விற்பனையான நிலையில், கடந்த ஒரு மாதமாக ரூ.550 முதல் ரூ.620 வரை விற்பனையாகி வருகிறது.
இதனால் காப்பி விவசாயம் செய்யும் மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பழநி மலைத்தொடர்களில் உள்ள மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் காப்பி, அதிக சுவையுடன் மிகுந்த தரமாக இருப்பதாக பிரதமர் மோடி கடந்த முறை ஒளிபரப்பு செய்யப்பட்ட மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.