செம்பனார்கோவில் பகுதியில் காலங்காலமாக நடைபெறும் தென்னங்கீற்று உற்பத்தி: நவீன காலத்திலும் மவுசு குறையவில்லை
செம்பனார்கோவில்: நம் முன்னோர்கள் தென்னங்கீற்றுகளால் ஆன குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தனர். இதனால் சீதோஷ்ண நிலைக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள், கோடை காலங்களில் சரியான காற்றோட்ட வசதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் தென்னங்கீற்றுகளின் பயன்பாடு குறைந்து, இந்த தொழிலில் ஈடுபடுவோர் மாற்று தொழிலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் தென்னங்கீற்றை முடைந்து விற்பனை செய்யும் பணி காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியது:நாங்கள் பல ஆண்டுகளாக தென்னங்கீற்று முடையும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
தென்னங்கீற்று முடைவதற்கு தேவையான தென்னை மட்டைகளை திண்டுக்கல், கம்பம், தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம். கொள்முதல் செய்யப்பட்ட தென்னை மட்டைகளை தென்னங்கீற்றுகளாக முடைந்து விற்பனை செய்வோம். தற்போது மழை காலமாக இருப்பதால் தென்னங்கீற்று ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கோடைக்காலங்களில் சுமார் ரூ.11, ரூ.12 வரை விற்பனை ஆகும். இங்கு முடைந்து விற்பனை செய்யப்படும் தென்னங்கீற்றுகளை பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் தென்னங்கீற்று பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறோம்.
எனவே பொதுமக்கள், தென்னங்கீற்றுகளை வாங்கி பயன்படுத்தி நன்மை பெற வேண்டும். இதன்மூலம் எங்களைப் போன்ற தொழிலாளர்களும் பயனடைவார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் தென்னங்கீற்று விற்பனை குறைந்துள்ளது என்றனர்.