கூட்டணி கட்சியை சிதைத்து அபகரிப்பதுதான் பாஜ மாடல்: செல்வப்பெருந்தகை சாடல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று இரவு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் சென்றுள்ளார். இத்தனை காலம் ஏன் மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை? ஏன் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. இதுதான் அதிகார மமதை என்பது. மணிப்பூர் மாநிலத்தில் இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கி பாஜ தங்கள் திருவிளையாடலை அரங்கேற்றியது.
அதேபோன்ற ஒரு செயலை பாஜ தமிழகத்திலும் நுழைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களின் இந்த செயலுக்கு ஒரு சில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் வழக்குப்பதிவு செய்வோம், இயக்கத்தை முடக்குவோம், சோதனை நடத்துவோம் என்று மிரட்டுகின்றனர். இதனால் அச்சமடைந்து கைகட்டி வாய் கட்டி எஜமானர்கள் நீங்கள் சொல்வதை செய்வோம் என்று சரணடைந்து கிடக்கின்றனர். பாஜவை தமிழகத்தில் காலூன்ற விட்டால் மணிப்பூர், உத்தரபிரதேசம் போன்ற நிலைமைதான் தமிழகத்திற்கு ஏற்படும்.
பாஜ, அதிமுகவை கூறு போட்டு விட்டது. இதுதான் பாஜவின் மாடல். பாஜவிற்கு எந்த மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி கட்சியை சிதைப்பது அல்லது அபகரிப்பது தான் மாடல். அதிமுகவில் ஏற்படும் பிரச்னையை எடப்பாடி தீர்த்து வைப்பதற்கு பதிலாக அமித்ஷா தீர்த்து வைக்க முயல்கிறார். அப்படி என்றால் அதிமுகவின் உண்மையான தலைவர் யார்? இவ்வாறு பேசினார்.