தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தெற்கு ரயில்வேக்கு பொதுமக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்தன. தமிழகத்தில் 38 ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் மற்றும் உள்ளூர் ரயில்கள் வேறு வேறு நிலையத்தில் நின்று செல்லும். ரூ.6.626 கோடி மட்டும் இந்த நிதி ஆண்டுக்கு ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ.871 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் இந்திய தொழில்நுட்பத்தில் ஐசிஎப்யில் தயாரிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையாக நடைபெறுகிறது. ரயில் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்கள் பயன்பெறும்.
தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது என்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தவறானது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 22ம் தேதி தமிழகம் வருகிறார். அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு, அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்.
அமலாகத்துறை சோதனை என்பது ஆவணத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக செயல்படுகிறது. தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் திருமாவளவன் நிலையாக இல்லை. பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைத்து வருகிறார்.
பட்டியலின மக்கள் மீது சிறிதளவும் அக்கறை இல்லை. கேள்வி கேட்டால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என பயப்படுகிறார். திமுக, காங்கிரசில் இருந்து பாஜவுக்கு பலர் வர உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. பட்டியிலின மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் விடுதியிலும் உரிய வசதி இல்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.